Sunday, November 24, 2013

பண்டிகைகள்




பண்டிகைகளால், நமது நாட்டில், பொருட் செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந் திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகிறவர்களுக்கு உடனே பகுத்தறிவற்ற வைதீக மூடர்கள்தேசத் துரோகி” “மதத் துரோகி” “வகுப்புவாதி” “நாஸ்திகன்என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவு டையவராகச் செய்ய இதுவரையிலும் எந்த தேசீயத் தலைவர்களாவது, எந்த தேசியத் தொண்டர்களாவது எந்த தேசீயப் பத்திரிகைகளாவது முயற்சி எடுத்து கொண்டார்களா? இன்னும் இதுபோன்ற மூடநம்பிக்கைக்கான விஷயங்களைசுயராஜியம்” “சுதந்தரம்” “காங்கிரஸ்” “பாரதமாதா” “மகாத்மா காந்தி” “காந்தி ஜயந்திஎன்னும் பெயர்களால் பிரசாரஞ் செய்து மற்றும் பண்டிகைகளையும், உற்சவங்களையும், விக்கிரகங்களையும், கற்பித்து மக்களை ஏமாற்றிக்கொண்டுதானே வருகிறார்கள்.

இவ்வாறு தேசீய பிழைப்புக்காரர்கள் ஒருபுறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதீக மூடர்கள் ஒருபுறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒருபுறமும் புராணப் பிழைப்புக்காரர்களும், குருக்கள்களும், புரோகிதர்களும் மற்றொருபுறமும் பண்டிகைப் பிரசாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

-
பெரியார்
['
குடிஅரசு', 22.11.1931]

No comments:

Post a Comment